பிரம்மச்சுவடி
நீங்கள்
அனைவரும் 90 களில் வெளியான லக்கிமேன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் நடந்ததை
போன்ற ஒரு சம்பவம் எமலோகத்தில் நடக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
அன்று காலை சித்திரகுப்தன்
தன் அலுவல் மேஜையை சுத்தம் செய்யும் போது கை தவறி பிரம்மசுவடி பூமியில் விழுந்து
விட்டது. எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.
பிரம்மச்சுவடி கீழே விழுந்து இரண்டு நிமிடங்களுக்குள் பிரம்மா எமலோகத்தில்
தோன்றினார்.
நடந்த
தவறுக்கு எமனும், சித்திரகுப்தனுக்கும் பிரம்மாவிடம் மன்னிப்பு கேட்டனர். இது ஒரு பொறுப்பற்ற
செயல், இதற்கு மன்னிப்பே கிடையாது. 24 மணி நேரத்திற்குள் தொலைந்த பிரம்மச்சுவடியை
தேடி கண்டு பிடித்தாக வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என்று எச்சரித்து விட்டு பிரம்மா சென்றார்.
பிரம்மச்சுவடியை
தேடி எமனும், சித்திரகுப்தனும் பூமியை வந்தடைந்தனர். சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம்
இங்கே தேடலுக்கான சிறந்த வழி எது என்று கேட்க அவர் அருகில் இருந்த கம்ப்யூட்டர்
சென்டரை காட்டினார். அந்த கம்ப்யூட்டர் சென்டருக்குள் எமனும், சித்திரகுப்தனும் நுழைய அவர்களை
அண்ணாச்சி வரவேற்றார். அவரிடம் இங்கே தேடலுக்கான சிறந்த வழி எது என்று எமன் கேட்க
அண்ணாச்சி அவர்களுக்கு கூகிள் பற்றி கூறினார்.
பிறகு எமனும், சித்திரகுப்தனும் கூகிளில்
பிரம்மச்சுவடி என்று தேட அவர்களுக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் முடிவுகள்
கிடைத்தன. அவற்றுள் பல முடிவுகளில் நவரச நாயகன் கார்த்திக், கவுண்டமணி, செந்தில், சில்க் ஸ்மிதா ஆகியோரின் புகைப்படமே கிடைத்தது. பல
சுட்டிகளில் தேடியும் பிரம்மச்சுவடி
பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
மீண்டும்
எமன் அண்ணாச்சியிடம் விசாரிக்க கூகிளில் கிடைக்காத தகவல்கள் கூட சில நேரங்களில்
விக்கிப்பீடியாவில் கிடைக்கும் என்று கூற அவர்கள் விக்கிப்பீடியாவிலும் தேடி
பார்த்தனர். அங்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மீண்டும்
எமன் அண்ணாச்சியிடம் விசாரிக்க “உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை தான் என்னையா” என்று
அண்ணாச்சி விசாரிக்க “ஒரு முக்கியமான அலுவல் கோப்பினை தொலைச்சுட்டோம். அதை தான்
தேடுறோம்” என்று சித்திரகுப்தன் சமாளித்தான்.
“இவ்வளோ தான்
பிரச்சினையா, சமூக வலை தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றுள் சில மணி நேரத்தில் உலகம் முழுதும் உள்ள நாடுகளில்
இருக்கும் பலரையும் தொடர்பு கொள்ள முடியும். அவர்கள் மூலமாக நீங்கள் தொலைத்ததை
கண்டுபிடிக்கலாம்” என்று அண்ணாச்சி கூற எமன், சித்திரகுப்தன் இருவரும் பேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் போன்ற தளங்களில்
ஆளுக்கொரு அக்கவுண்ட் திறந்து நண்பர்களை சேர்க்க ஆரம்பித்தனர்.
பிரம்மன்
கொடுத்த 24 மணி நேரம் அவகாசம் முடிந்ததே தெரியாமல் இருவரும் இணையத்தில் ஆழ்ந்தனர்.
24 மணி நேரம் ஆகியும் எந்த தகவலும் இல்லாததால் பிரம்மாவும் பூமியை அடைந்தார்.
பிரம்மாவை பார்த்த பின் தான் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்ததை உணர்ந்தனர்
எமனும், சித்திரகுப்தனும்.
தங்களுக்கு
கொடுத்த நேரம் மிகவும் குறைவு என்றும் இன்னும் சில மணி நேரம் ஒதுக்குமாறும்
இருவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். இருவரையும் பார்த்து சிரித்த பிரம்மா தன்
கையில் இருக்கும் பிரம்மச்சுவடியை அவர்களிடம் காட்டினார்.
“பூமியில் ஏற்பட்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சி உங்களுக்கு தெரிய வேண்டும்
என்பதற்காகவே இது போன்று ஒரு விளையாட்டை நடத்தினேன். இனி நம்ம தலைமை அலுவலுகங்களான
பிரம்மலோகம், சிவலோகம், தேவலோகம், எமலோகம் ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர் மூலமாக தான் கணக்கு வழக்கு பார்க்க
போறோம். அதுக்கு டெமோ கொடுக்க தான் உங்களை அனுப்பி வச்சேன். முதல் வேலையா உங்க
பிரம்மச்சுவடியை தூக்கி போட்டுட்டு அதுல இருக்க டேட்டா எல்லாத்தையும்
கம்ப்யூட்டர்க்கு மாத்துங்க. பென் ட்ரைவ் ல ஒரு பேக்அப் எடுத்து எனக்கு ஒரு காப்பி
கொடுங்க என்றார்.
தங்கள்
எமலோகம் கணினி மயமாக போவதை எண்ணி சந்தோசத்துடன் எமலோகம் கிளம்பினர் எமனும், சித்திரகுப்தனும் அண்ணாச்சிக்கு
நன்றி கூறிவிட்டு.
No comments:
Post a Comment