Wednesday 11 March 2015

வேடிக்கை மனிதர்கள்

சாலையின் இருபுறமும் விநாயகர் பல அவதாரங்களை காட்டி கொண்டிருந்தார். நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் மதுரை மாநகரம் முழுவதும் விநாயகர் சிலைகள் அமோகமாக விற்று கொண்டிருந்தது. அஷ்வினும் ரேஷ்மியும் தங்கள் செல்ல மகன் வினோத்தை தூக்கி கொண்டு சாலையோர கடைகளை அலசி கொண்டிருந்தனர்.

சதுர்த்திக்கு நல்ல ஒரு சிலை வாங்குவதற்காக வீட்டில் இருந்து கிளம்பியிருந்தார்கள். இரண்டு, மூன்று மணி நேரம் ஆகியும் அவர்கள் எதிர்பார்த்த விலையிலும், தரத்திலும் சிலை கிடைக்க வில்லை. கொஞ்ச நேரத்திலேயே ஏதேனும் ஒரு சிலையை வாங்கி செல்வது என்று அஷ்வின் முடிவு செய்து விட்டான். விநாயகர் என்ன கோவிச்சுக்குவா போறாரு?. ஏதாவது ஒண்ண வாங்கிட்டு வா ரேஷ்மி என்றான். “சாமி காரியத்துக்கு வாங்குறோம். நல்லதா பார்த்து தானே வாங்க முடியும்” என்று அஷ்வினின் வாயை ரேஷ்மி அடைத்து விட்டாள்.

நேரம் செல்ல செல்ல அஷ்வின் ரொம்ப கடுப்பானான். வினோத்தும் மிகவும் சோர்வடைந்தான். பிறகு மூவரும் கடையில் கரும்பு சாரினை அருந்தி விட்டு தேடல் படலத்தை தொடர்ந்தனர். கரும்பு சாரு கடையில் இருந்து நான்கு கடை தள்ளியிருந்த கடையில் இருந்த ஒரு சிலையை எடுத்து ரேஷ்மி அஷ்வினிடம் காட்டினாள். ரொம்ப நல்லாயிருக்கு என்றான் அஷ்வின். அந்த நேரத்தில் புத்தர், இயேசு சிலைகளை ரேஷ்மி காட்டியிருந்தால் கூட நல்லாயிருக்கு என்று தான் சொல்லியிருப்பான் அஷ்வின்.

இருவருக்கும் அந்த சிலை பிடித்து போக கடைக்காரனிடம் விசாரித்தனர். அவன் 450 ரூபாய் என்றான். ரேஷ்மி 250 ரூபாய் என்று பேரம் பேச ஆரம்பித்தாள். 500 ரூபாய் கொடுத்தாவது இந்த சிலையை வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தான் அஷ்வின். கடைக்காரன் ரேஷ்மியிடம் இருந்த சிலையை பிடுங்கி கொண்டு கட்டுபிடி ஆகாதும்மா என்றான்.

“கடவுளுக்கும் பேரம் பேசும் வேடிக்கை மனிதர்கள் இன்னும் பூமியில் வாழ்கிறார்கள் தானே” என்று தனக்கு தானே கூறி கொண்டான் கடைக்காரன். இதை கேட்டதும் “கடவுளையும் வியாபாரம் ஆக்கி பணம் சம்பாதிக்கும் வேடிக்கை வியாபாரிகளும் இன்னும் பூமியில் வாழ்கிறார்கள் தானே” என்றான் அஷ்வின்.

இப்படியே விவாதம் தொடர இறுதியாக 350 ரூபாய் என்று பேசி முடித்து கொண்டனர். ரேஷ்மியும், கடைக்காரனும். இப்ப தான் அஷ்வினின் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.
அடுத்த நாள் மாலை வினோத் வேகமாக ஓடி வந்து அம்மா என்று கட்டி கொண்டான். செல்லம் ஸ்கூலுக்கு போயிட்டு வந்துட்டியா வேகமா போயி டிரஸை மாத்திட்டு சாமி கும்பிட்டு வா; அம்மா உனக்கு கொலுக்கட்டை, சுண்டல் எல்லாம் செய்து வச்சுருக்கேன் என்றாள்.

இதை எதையும் கண்டு கொள்ளாத வினோத் அம்மா நான் ஸ்கூல்’ல நடந்த மாறுவேட போட்டியில் ஜெயிச்சுட்டேன் அம்மா. முதல் பரிசு எனக்கு தாம்மா. நீ காலையில போட்டு விட்ட விநாயகர் வேஷம் தாம்மா. டீச்சர் என்னை ரொம்ப பாராட்டுனாங்க என்றான்.

‘அப்படியா தங்கம், ரொம்ப சந்தோஷம் டா. அப்பாகிட்ட சொல்லிட்டியா என்றாள். ம்ம்ம்.. சொல்லிட்டேனே’ என்றான் வினோத். ‘நாம கும்பிடுற சாமி தான் உனக்குள்ள இருந்து உன்னை ஜெயிக்க வச்சுருக்காரு வினோத்’ என்றாள் ரேஷ்மி.

என்னம்மா சொல்ற எனக்குள்ள சாமி இருக்காறா என்று குழந்தை மொழியில் கேட்டான் வினோத். ஆமாண்டா தங்கம். சாமி எல்லார்க்குள்ளயும் இருக்காரு என்றாள் ரேஷ்மி.
‘எனக்குள்ளயே சாமி இருக்காரு. அப்புறம் ஏம்மா வேற ஒரு சாமியை வாங்க ரோடு ரோடா நேத்து அலைஞ்ச’ என்றான் வினோத். ரேஷ்மிக்கு சாட்டையால் அடித்தது போல் இருந்தது. ரேஷ்மி சாமியறையில் இருந்த விநாயகர் சிலையை நோக்கினாள். அந்த சிலை அவளை பார்த்து ஏளனம் செய்து சிரிப்பது போல் உணர்ந்தாள். நாமளும் இந்த ரேஷ்மி மாதிரி தாங்க நமக்குள்ளயும் சக மனிதர்குள்ளேயும் இருக்குற கடவுளை உணராமல் கோவில், குளம்னு சுத்தி சுத்தி  கடவுளை தேடிக்கிட்டு இருக்கோம்.

Wednesday 4 March 2015

சிறுகதை

குமார் ஒரு நல்ல எழுத்தாளன். எழுத்தையும் மொழியையும் நேசித்து எழுதுபவன். இதுவரை பல நல்ல படைப்புகளை உருவாக்கியிருக்கிறான். ஆனால் கடந்த சில மாதங்களாக பெரிதாக எதுவும எழுதியிருக்கவில்லை. அன்று இரவு எட்டு மணிவாக்கில் கையில் நோட்டு  பேனாவுடன் தன் அறைக்குள் நுழைந்தான். சிறுகதை ஒன்றை எழுதலாம் என்று முடிவு செய்திருந்தான்.


நோட்டின் உச்சத்தில் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்தான்.
“தேவதைகள் வானத்தில் இருந்து பூமிக்கு வருவதில்லை.
பூமியில் இருந்தே வானுக்கு செல்கிறார்கள்.
எனக்கென்று பூமியில் பிறந்த ஒரு அழகான தேவதை, சிவானி” என்று காதல் ரசம் சொட்ட சொட்ட எழுத ஆரம்பித்தான்.



சிவானியை எங்கே முதன் முதலில் பார்த்தான்? எப்போது பேசினான்? எப்போது அவனுக்குள் காதல்
மலர்ந்தது? எப்போது காதலை வெளிபடுத்தினான்? போன்ற விஷயங்களை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் எழுதினான். அதை ஒரு கதையாக எழுதினான் என்று சொல்வதை விட ஒரு அழகிய கவிதையாக வடித்தான் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.



என்னையும் உட்பட சில எழுத்தாளர்கள் நான்கு வரி எழுதுவதற்குள் பத்து முறை அடித்தல் திருத்தல்களை செய்து விடுவர். ஆனால் குமார் அப்படி இல்லை. மூன்று பக்கம் எழுதி விட்டான். மிக அழகான எழுத்துக்கள். ஒரு அடித்தல் திருத்தல் கூட கிடையாது. நாலாவது பக்கத்தை எழுத ஆரம்பித்தான்.



“அன்று சிவானி என்னை அழைத்திருந்தாள். எப்படியும் தன் மனதில் மறைத்து வைத்திருக்கும் காதலை வெளிபடுத்திவிடுவாள் என்ற ஆசையுடன் கிளம்பினேன்.” என்று குமார் எழுதிக்கொண்டிருக்கும் போதே யாரோ அறையின் கதவை தட்டினார்கள்.


குமார் சென்று கதவை திறக்க அவன் அம்மா அவனை சாப்பிட வருமாறு அழைத்தாள். நோட்டை
அப்படியே மூடி வைத்து விட்டு சாப்பிட கிளம்பினான். சாப்பிடும் போதும் கூட அவன் எண்ணங்கள் அந்த சிறுகதையின் மீதே இருந்தது. சாப்பிட்டு விட்டு மீண்டும் தன் அறைக்குள் நுழைந்தான்.


அறைக்குள் வந்து நோட்டை திறந்து பார்த்தவனுக்கு மிக பெரிய அதிர்ச்சி. அவன் எழுதிய எழுத்துக்கள் எதையும் காணவில்லை. நோட்டின் எல்லா பக்கங்களையும் தேடி பார்த்தான். அருகில் இருந்த வேறு சில நோட்டுகளில் கூட தேடி பார்த்தான். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சரி போனா போகட்டும் என்று முடிவு செய்துவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தான்.


“தேவதைகள் வானத்தில் இருந்து பூமிக்கு வருவதில்லை. பூமியில் இருந்தே வானுக்கு  செல்கிறார்கள்.” என்று காதல் ரசம் சொட்ட சொட்ட எழுத ஆரம்பித்தான்.



“அன்று சிவானி என்னை அழைத்திருந்தாள். எப்படியும் தன் மனதில் மறைத்து வைத்திருக்கும் காதலை வெளிபடுத்திவிடுவாள் என்ற ஆசையுடன் கிளம்பினேன” என்று எழுதிவிட்டு “ன” மீது புள்ளி வைப்பதற்கும் மின் தடை ஏற்படுவதற்கும் சரியாக இருந்தது.



“எப்ப வருவேன் எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது” என்று நடிகர் ரஜினிகாந்த் பேசும் வசனம் தமிழ்நாட்டில் மின்தடைக்கு மட்டுமே சால பொருந்தும்.



குமார் நோட்டை மூடி வைத்து விட்டு சற்றே இருக்கையில் சாய்ந்தான். இருபது நிமிட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மின் இணைப்பு வந்தது. மின் தடை நீங்கினால் மகிழ்ச்சி வரும் என்று எண்ணினால் அதிர்ச்சியே வந்தது. மீண்டும் அவன் எழுதிய எழுத்துக்கள் எதையும் காணவில்லை.



என்ன செய்வது என்றே தெரியவில்லை குமாருக்கு. சற்றே மனம் குழம்பினான். பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தான். மீண்டும் பிள்ளையார் சுழியில் இருந்து ஆரம்பித்தான்.



“தேவதைகள் வானத்தில் இருந்து பூமிக்கு வருவதில்லை.” என்று தொடங்கி கடகடவென்று எழுத ஆரம்பித்தான். மீண்டும் அதே இடம் “காதலை வெளிபடுத்திவிடுவாள் என்ற ஆசையுடன் கிளம்பினேன்” என்று எழுது கொண்டிருக்கும் போதே பேனாவில் மை தீர்ந்து விட்டது. குமார் மிகவும் எரிச்சல் அடைந்தான்.



வேறு ஒரு பேனாவை தேடினான். பேனா எதுவும் கிடைக்கவில்லை. பென்சில் ஒன்று தான் கிடைத்தது. அந்த பென்சிலை வைத்தாவது மீதி கதையை எழுதி முடித்துவிட வேண்டும் என எண்ணினான்.



மீண்டும் நோட்டை திறக்க மீண்டும் அதிர்ச்சி. எழுதியது எதையும் காணவில்லை. எழுத்தை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுக்கவா முடியும்? அப்படியே கொடுத்தாலும் அந்த புகாரினை காவல்துறையினர் ஏற்று கொள்வார்களா என்ன? என்று பல கேள்விகள் குமாரின் மனதில் ஓடின. சிறிது நேரம் யோசித்தவன் மீண்டும் பென்சிலில் எழுத ஆரம்பித்தான்.



“தேவதைகள் வானத்தில் இருந்து பூமிக்கு வருவதில்லை.” என்று காதல் ரசம் சொட்ட சொட்ட எழுத ஆரம்பித்தான். ஏற்கனவே மூன்று முறை எழுதி தொலைத்த அதே பழைய ரசம் தான்.



அதே மூன்று பக்கங்கள். “காதலை வெளிபடுத்திவிடுவாள் என்ற ஆசையுடன் கிளம்பினேன்” என்று எழுதி நிறுத்தினான். அடுத்த நிமிடமே அழிப்பான் (ஆங்கிலத்தில் eraser) கொண்டு அழித்தால் எப்படி பென்சில் எழுத்துக்கள் அழியுமோ அது போலவே அவன் கண் முன் அவன் எழுதிய எழுத்துகள் அனைத்தும் அழிந்தது.


அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. லேசாக மயக்கம் வர அப்படியே அருகில் இருந்த கட்டிலில் படுத்து தூங்கிவிட்டான்.


காலை விடிந்ததும் நடந்தவை அனைத்தையும் தன் தந்தை சேகரிடம் கூறினான் குமார். சேகர் சற்று குழம்பினாலும் தன் மகனை அழைத்து கொண்டு மனநல மருத்துவர் கௌதமிடம் சென்றார். கௌதம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விசாரித்து விட்டு குமாரை பரிசோதித்தார்.



குமாரை பரிசோதனை அறையிலேயே விட்டுவிட்டு சேகரிடம் வந்து “ ஒண்ணும் பிரச்சினை இல்லை. குமார் கதை எழுதுனதா சொல்ற நோட்டு, பேனா, பென்சில் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு இரண்டு நாளைக்கு அப்புறம் வாங்க” என்றார்.


சேகர் மருத்துவரிடம் “எனக்கு என்னமோ பயமா இருக்கு சார். நேத்து ராத்திரி எங்க வீட்டுல இவன தவிர வேற யாருமே இல்லை. எல்லோரும் பழனி கோவிலுக்கு போயிருந்தோம். இன்னிக்கு காலையிலே தான் வந்தோம். அவன் பாட்டுக்க எழுதுனத காணோம், அம்மா சோறு போட்டுச்சு’னு உளறிகிட்டு இருக்கானே சார்” என்றார் சோகமாக.



“ஒண்ணும் கவலை படாதீங்க சேகர். இரண்டு நாளைக்கு அப்புறம் வாங்க. சரி பண்ணிடலாம்” என்றார் கௌதம்.



இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் குமாரும் சேகரும் மருத்துவரை காண வந்தனர். அவர்கள் எடுத்து வந்திருந்த நோட்டை வாங்கி பார்த்தார் கௌதம்.



பிறகு கௌதம் சேகரை தனியாக அழைத்து “ உங்க பையன பத்தி அவன் நண்பர்கள்’ட விசாரிச்சேன். அவன் கல்லூரி காலத்துல சிவானி’னு ஒரு பொண்ண லவ் பண்ணிருக்கான். அவளும் இவன லவ் பண்ணிருக்கா. சாலை விபத்துல அந்த பொண்ணு இறந்து போயிட்டாளாம்.”



“குமார், அவனோட வாழ்க்கையிலே நடந்த உண்மையை தான் கதையா எழுத முயற்சி பண்ணிருக்கான். ஆனா சிவானி இறந்துட்டா’ங்கிறத மட்டும் உங்க பையன் மனசு ஏத்துக்கலை. அதான் அவள் இறந்துட்டா’னு குமார்’னால எழுத முடியல”



“எழுத்து அழியுதுனு சொல்றது எல்லாம் ஒரு பிரம்மை தான். நோட்டை பாருங்க. இதே கதையை நாலு தடவ எழுதி இருக்கார். இந்த பேனா’ல மூன்று தடவ இந்த பென்சில்’ல ஒரு தடவ” எல்லா முறையும் ஒரே இடத்துல கதையை நிறுத்தி இருக்கார். மனசு ஒத்துகிறாத ஒரு விஷயத்தை யாராலும் எழுத முடியாது”



“குமாருக்கு இருக்கிறது சாதாரண மன நோய் தான். இங்க மருத்துவமனையிலே தங்கி ஒரு வாரம் யோகா, தியானம் போன்ற பயிற்சியும், கொஞ்சம் மருந்துகளும் எடுத்துக்கிட்டார்னா எல்லாம் சரியாயிடும்” என்றார் கௌதம்.



கௌதம் கூறியபடி சேகர் குமாரை மருத்துமனையில் விட்டுவிட்டு கனத்த மனதுடன் வீட்டிற்கு கிளம்பினார். ஒரு வாரம் கழித்து வந்து குமாரை அழைத்து சென்றார்.



பத்து நாட்களுக்கு பின் குமார் மீண்டும் கையில் நோட்டு பேனாவுடன் தன் அறைக்குள் நுழைந்தான். எழுத ஆரம்பித்தான்.

“தேவதைகள் வானத்தில் இருந்து பூமிக்கு வருவதில்லை.

பூமியில் இருந்தே வானுக்கு செல்கிறார்கள்.”.....................................தொடரும்.